Saturday, June 27, 2020

இந்த இடம்தான் அந்த இடம்...



முள்ளி வாய்க்கால் போயிருந்தேன்- அந்த
முல்லைத் தீவையும் மோதி வந்தேன்
முள்ளில் கிழிந்த என் கண்களிலே- நீர்
முட்டித் தெறித்ததை யாரறிவார்?

ஆனந்தபுரத்தை கடக்கையிலே என் ஆவி துடித்ததை என்ன சொல்ல?
நானந்த துயரம் சொல்வதற்கு- என்
நா படும்பாடு கொஞ்சமல்ல

இந்த இடம்தான் அந்த இடம்- எம்
இலட்சம் உயிர்களைக் கொன்ற இடம்
சொந்தம் சொல்லி நானழுதால்- விண்
சுற்றும் கோள்கள் நின்றுவிடும்

சாகாத காற்றின் சப்தங்களில்- எம்
சனங்களின் அழுகுரல் கேட்டறிந்தேன்
ஆகாயம் எரித்த சாம்பல் துகள்- மண்ணில்
ஆங்காங் கலைவதை கண்டறிந்தேன்

எரிவாய்ப் பட்ட சருகுகளாய்- உடல்
இற்றுப் போவர் எத்தனையோ?
நரிவாய்ப் பட்டநண்டுளாய்- இங்கு
நசுங்கிய சிசுக்கள் எத்தனையோ?

தாயிடம் பால்கொண்ட பிள்ளையரை- ஒரு
தடயம் இன்றியே எரித்தாராம்
ஆயிரம் எலும்புக்கூடுகளை- சீன
அமிலம் ஊற்றியே அழித்தாராம்

படர்ந்து கிடக்கும் வெறுமையிலே- இனம்
பட்ட பெருந்துயர் சில அறிவோம்
நடந்த மெய்க்கதை மொத்தமென்ன- ஏ
நந்திக்கடலே நீயறிவாய்

தோண்டு மிடத்தில் தங்கம் வரும்- என்று
சொல்லிக் களித்த ஈழத்தில்
தோண்டு மிடத்தில் குறுதி வரும்- என்று
சொல்லிப் புலம்பும் நிலையுற்றோம்

மைநீட்டிச் செய்த நிறம் படைத்த- பல
மங்கையர் கூந்தலில் பூவுமில்லை
கைநீட்டிப் பார்த்தேன் தோழர்களே- சிலர்
கரங்களுமில்லை கைகொடுக்க

மண்ணில் விழுந்த மழைத்துளிகள்- அவை
மண்ணில் தொலைந்து போவதில்லை
எண்ணில் அடங்கா உயிர்த் தியாகம்- வெறும் இறப்புக் கணக்கில் சேர்வதில்லை

அழிந்துபோனது போலிருக்கும்- ஆயின்
அருகம் புல்லுக்கு அழிவேது?
பொழியும் ஒரு துளி பட்டவுடன்- அது
பொட்டென் றெழுமே அழியாது

எந்த யுகத்தில் போர்களில்லை- அட
எந்த யுத்தத்தில் தோல்வியில்லை
அந்த யுகத்தை எருவாக்கு- நீ
அடுத்த யுகத்தை உருவாக்கு

#வைரமுத்து