Sunday, March 11, 2018

முதன் முதலாய் அம்மாவுக்கு...



 "பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே !
காசு வந்த வேளையில
பாசம் வந்து சேரலையே !
"





முதன் முதலாய் அம்மாவுக்கு...

ஆயிரம்தான் கவி சொன்னேன்
அழகழகா பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே! 

காகிதத்தில் மகன் எழுத்து
காத்தெல்லாம் மகன் பாட்டு
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி பேசலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதியென்ன லாபமுன்னு
எழுதாமப் போனேனோ ? 

பொன்னையா தேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்பு வலி பொறுத்தவளே,  

வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில் நீ சுமந்ததில்ல
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு! 

கண்ணு காது மூக்கோட
கருப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையில
என்னென்ன நினைச்சிருப்ப ? 

கத்தி எடுப்பவனோ ?
களவாடப் பிறந்தவனோ ?
தரணியாள வந்திருக்கும் ?
தாசில்தார் இவன்தானோ ? 

இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாம
நெஞ்சூட்டி வளத்த உன்னை
நினச்சா அழுகைவரும். 

கதகதண்ணு கழி கிண்டி
கழிக்குள்ளே குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ணெய்
கலந்து தருவாயே... 
தொண்டையில அதுயிறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா! 

கொத்தமல்லி வறுத்து வச்சிக்
குறுமொளகா ரெண்டு வச்சு
சீரகமும் சிறுமிளகும்
சேர்த்து வச்சு நீர் தெளிச்சு
கும்மி அரச்சு நீ
குழகுழன்னு வழிக்கையில
அம்மி மணக்கும்
அடுத்த தெரு மணமணக்கும். 

தித்திக்க சமைச்சாலும்
திட்டிக்கிட்டே சமைச்சாலும்
கத்திரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்.

கோழிக் கொழம்பு மேல
குட்டிக்குட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சி ஊரும்.

வறுமையில நாமபட்ட
வலி தாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன் ! 

பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே !
காசு வந்த வேளையில
பாசம் வந்து சேரலையே ! 

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கயில
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போனபின்னே...

அஞ்சாறு வருசம் உன்
ஆசை முகம் பாக்காமப்
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே.

படிப்பு படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே ! 

பாசம் கண்ணீரு
பழைய கதை எல்லாமே
வெறிச்சோடிப் போன
வேதாந்தமாயிருச்சே ! 

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியா கூட்டி வந்து
கரை சேத்து விட்டவளே,

எனக்கொன்னு ஆனதுன்னா
உனக்கு வேற பிள்ளை உண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா ?
.............................................. வைரமுத்து

★*******★*******★*****★******★******★


‘‘பாபாவில் உங்களுக்குப் பிடித்த பாட்டு?’’
‘‘எல்லாப் பாட்டும் பிடிக்கும். அதில் இடம்பெறாத பாடல்களில் ஒன்று ரொம்பப் பிடிக்கும். பாபா மூட்டை சுமக்கும்போது தாய் சுஜாதாவின் கண்ணில் கண்ணீர் வழியச் செய்யும் பாட்டு, இப்படி மலர்ந்து மலர்ந்து எனக்கு உள்ளேயே உலர்ந்துபோன பூக்கள் ஓராயிரம்…


 கண்ணுக்கினிய மகனே!
உன்னை
கருவில் சுமந்தேன் மகனே!

கருவறை கழிந்து விழுந்த பின்னே
கையில் சுமந்தேன் மகனே!

மார்பில் தாய்ப்பால் பருகும்போது
மடியில் சுமந்தேன்
மகனே!

தூங்கும்போதும்
ஏங்கும்போதும்
தோளில் சுமந்தேன் மகனே!

கையை மீறி வளர்ந்தபோது
கண்ணில் சுமந்தேன் மகனே!

நெஞ்சு தானாய் நிற்கும் வரைக்கும்
நெஞ்சில் சுமப்பேன் மகனே!

சுமக்கப் பிறந்தவள் நான் தானே – நீ
சுமந்து அலைவது ஏன் மகனே!

மூட்டை சுமக்கும் கூலியல்ல – நீ
நாட்டைச் சுமக்கப் பிறந்தவனே.

................வைரமுத்து

***★****★****★****★****★*****★*****★****★****★****

ஒரு காலத்தில் ஒரு குளம் இருந்தது ...

தண்ணி பெருத்த குளம்
தாமரை பூத்த குளம்
ஊருக்குத் தெம்பக்கம் 
ஒருக்களிச்சுப் படுத்த குளம். 

உள்காட்டு மூலையில 
ஊர் பொறந்த வேளையில
கர்ண மகராசா 
கரையெடுத்து வைச்ச குளம்.

மழையோட நீர் வாங்கி
மண்ணோட நிறம் வாங்கி
செந்தண்ணியானாலும்
சீனித்தண்ணியான குளம்.

சாலி மரமிரண்டு 
தண்ணியெல்லாம் நிழல் பரப்பி
கரையோரம் குடை பிடிச்சு
காவலுக்கு நின்ன குளம்.

காடுகரை போனவர்க்கும் 
காக்கை குருவிகட்கும்
ஆடுமாடு அத்தனைக்கும்
அனுசரணையான குளம்.

ஐப்பசி கார்த்திகையில் 
அடைமழைய உள்வாங்கி
நெறமாசப் பொம்பளையா
நெறப்பெருக்கா நின்ன குளம்.

வாழ்ந்து கெட்ட சீமாட்டி
வளவி மட்டும் போட்டது போல்
கோடையிலும் குடிதண்ணி
கொஞ்சூண்டு வைச்ச குளம்.

சித்திரையில் சிலுசிலுக்க
மார்கழியில் கதகதக்க
மாயமோ மந்திரமோ
மந்திரிச்சு விட்ட குளம்.

தவக்கா சத்தமிட 
சரஞ்சரமா கொக்கு வர
சொட்டை வாளை மீன் தவ்வ
சுறுசுறுப்பா இருந்த குளம்.

பொசுக்குன்னு துணி மாத்தி
விசுக்குன்னு கரையேற
ஆம்பளைய பொம்பளைய
அரைகுறையா பார்த்த குளம்.

தாகமுன்னு வந்தாலும்
தற்கொலைக்கு வந்தாலும்
வாங்க மக்கா வாங்க மக்கா
வாய் நிறைய சொன்ன குளம்.

மாரோட புள்ளை கட்டி
வயிறோட கல்லு கட்டி 
செவனம்மா பொணமாக
செத்து மெதந்த குளம்.

மனுஷப்பய கூடி 
மண்ணை ஏமாத்த
மழையெல்லாம் கூடி 
மனுஷனை ஏமாத்த

இன்னிக்குத் தேதிக்கு
இல்லேன்னு போன குளம்.
என்னைக்கு நெனைச்சாலும்
என் கண்ணுல உப்புக்குளம்.

.......................வைரமுத்து

★★★★★

இதயத்தில் என்னென்ன வேட்கை
இது இடைவேளை இல்லாத வாழ்க்கை
வாழ்வோடு போராட்டம் இங்கே - இதில்
வாழ்கின்ற நிமிஷங்கள் எங்கே?

....................வைரமுத்து

Wednesday, February 7, 2018

ஒரு வழிகாட்டியிலிருந்து...

சமீபமாக தமிழ் காமிக்ஸ் வாசகர் மொழிபெயர்ப்பில் ஈடுபடும் மொழிபெயர்ப்பாளர்கள் வாசகர்களிடம் சரியான அங்கீகாரம் இல்லை, வரவேற்பு இல்லை.  என்று சோர்ந்து போய் மொழிபெயர்ப்பிலிருந்து விலகுவதாக கருத்திடுவதை அறிகிறேன்.

பாராட்டுகளையும்,  லைக்குகளையும் எதிர்பாராமல்,  எந்த அவசர இலக்கும் வைத்துக் கொள்ளாமல்,  தங்கள் மன திருப்திக்காக மட்டுமே முழு ஈடுபாட்டுடன் ரசித்து ரசித்து மொழிபெயர்ப்பில் ஈடுபடுங்கள். சோர்வு ஏற்படாது.

இந்நிலையில் மொழிபெயர்ப்பாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும், தமிழுக்கு கிடைத்துள்ள இந்த மொழிபெயர்ப்பு தளம் அழிந்து போகாமல் இருக்க மற்ற வாசகர்களின் பங்களிப்பு குறித்தும் மூத்த மொழிபெயர்ப்பாளர் Illumi எழுதிய கட்டுரையிலிருந்து.....






Thursday, January 18, 2018

அடையாளம், தொன்மங்கள்...

வாடிவாசல் திறந்து விடும்... 


                     
ஜனவரி 2017
ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த மூன்றாண்டுகளாக ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை நீடித்துக் கொண்டிருந்தது.

 தமிழனின் அடையாளம் ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க,  தமிழ் மாணவர்கள் வாடிவாசல் திறக்கும் வரை, வீடு வாசல் செல்ல மாட்டோம்.  என்று அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றியை நெருங்கி விட்ட தருணம் அது.

தமிழ் மக்கள் இருளிலும் மழையிலும் குளிரிலும் வெயிலிலும் பல நாட்களாக போராடி தம் பராம்பரியத்தை மீட்டெடுத்தனர்.

 அப்படிப்பட்ட வெற்றிக்கு கவியரசு வைரமுத்துவின்  கவிதை வரிகள் :

************* வாடிவாசல்!  *************



வாடிவாசல் திறந்துவிடும்
    வாழ்த்துகிறேன் தம்பி – இனி
கோடிவாசல் திறக்கும்உன்
    கொள்கைகளை நம்பி

தலைவர்களே இல்லாத
    கட்சியொன்று காட்டி – ஒரு
தலைமுறைக்கே வழிசொன்னீர்
     தமிழினத்தைக் கூட்டி

அடையாளம் தொன்மங்கள்
     அழிக்குமொரு கூட்டம் – உங்கள்
படையாழம் பார்த்தவுடன்
    பயந்தெடுத்த தோட்டம்

பீசாவும் பெப்சியுமே
     இளைஞர்கள் என்று – வாய்
கூசாமல் சொன்னவரைக்
     கொன்றுவிட்டீர் கொன்று

சொல்வாங்கி எல்லாரும்
    சூளுரைத்த பாட்டு - கடல்
உள்வாங்கிப் போனதடா
    உங்கள்குரல் கேட்டு

ஒருகொம்பு ஆணென்றால்
    மறுகொம்பு பெண்தான் – அந்த
இருகொம்பின் மத்தியிலே
    இடுங்கியது மண்தான்

தண்பனியால் சுடுகதிரால்
    தமிழினமா சாகும்? – அட
தண்ணீரில் வீழ்வதனால்
     வெயில்நனைந்தா போகும்?

தெருவிருந்து போராடத்
    திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்
கருவிருந்து பெற்றாரின்
     கால்களுக்கும் வணக்கம்

சதுராடிக் களம்கண்ட
     சகோதரிகாள் வணக்கம் – உங்கள்
எதிர்காலக் கருப்பைகள்
     நெருப்பைத்தான் சுமக்கும்

காளைகளை மீட்டெடுக்கக்
    களம்கண்ட கூட்டம் – இனி
நாளைகளை மீட்டெடுக்க
     நாணில்அம்பு பூட்டும்

வரம்புகளை யார்விதித்தார்
    வரட்டுமொரு யுத்தம் – எங்கள்
நரம்புகளில் ஓடுதடா
    ராஜ ராஜ ரத்தம்

போராடிச் சாதித்துப்
     புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்
சாராயம் குறித்தும் நீர்
    ஆராய வேண்டும்

*************************************