Monday, March 4, 2024

எனக்காகப் பிறந்தவளை...

 



எனக்காகப் பிறந்தவளை

கண்டு பிடித்தேன்.

அவள் கண்ணசைவில்

ஒருகோடி கவிதை படித்தேன்.


என் பாதி எங்கே என்று

தேடி அலைந்தேன்.

அவளைப் பார்த்த பின்புதான்

நான் முழுமை அடைந்தேன்.

ஈருயிர் ஒன்றாய் - இனி 

அவள்தான் என் தாய்.


வேப்பம்பூ உதிர்கின்ற

என் வீட்டு முற்றம் - அவள் 

போடும் கோலத்தால்

அழகாய் மாறும்.


விண்மீன்கள் வந்து போகும்

மொட்டைமாடி - அவள்

கொலுசின் ஓசையினால்

சொர்க்கம் ஆகும்.


காற்று வந்து கதை பேசும்

கொடிக்கயிற்றில் - அவள்

புடவை அன்றாடம்

கூட்டம் போடும்.


காத்திருப்பாள் ஒருத்தி

என்ற நினைவு வந்து,

மனம் கடிகார முள்மீது

ஆட்டம் போடும்.


பாதரசம் உதிர்கின்ற

கண்ணாடி மேல்,

புதிதாக பொட்டு வந்து

ஒட்டிக் கொள்ளும்.


பழைய ரசம் - அவள் 

கையால் பறிமாறினால்,

பழரசமாய் இனிக்கிறதென

பொய்கள் சொல்லும்.


பூக்கடைக்குப் போகாத

கால்கள் இரண்டும்

புதுப்பழக்கம் பார் - என்று

திட்டிச் செல்லும்.


ஆண்களுக்கும் வெட்கம்

வரும் தருணம் உண்டு - என்று

ஓர் சிரிப்பு வந்து காட்டிச் செல்லும்.


#நா.முத்துக்குமார் 


No comments:

Post a Comment