Monday, October 18, 2021

6, பார்வை

...சத்தியத்தின் சக்தியால் இந்தப் பிரபஞ்சத்தை நான் வென்று விட்டேன்...

V for vendetta 







இந்த ஆறாம் அத்தியாயம் நோர்ஸ்ஃபயர் அரசு மக்களை மத உணர்வால் இணைப்பது பற்றியும், அரச அதிகாரிகள் சிலரின் குடும்பம் பற்றியும், மதகுரு 'அந்தோணி லில்லிமனின்'  கபடத்தனம் பற்றியுமான பார்வையை வழங்குகிறது.






ஈவி Vக்கு உதவ விரும்புகிறாள். அவள் தனக்கு உதவுவது கட்டாயமானதில்லை என உறுதிப்படுத்தும் V அவளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள சம்மதிக்கிறான்.




ஐரோப்பிய கலாச்சாரத்தின் முக்கிய கதைகளில் ஒன்று V விவரிக்கும் 'ஜான் ஃபாஸ்ட் ஒப்பந்தம்'

ஜான் ஃபாஸ்ட் பிசாசுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார்: பிசாசு ஜான் ஃபாஸ்டுக்கு வரம்பற்ற சக்தியையும் அறிவையும் கொடுக்கும், அதற்குப் பதிலாக ஃபாஸ்ட் பிசாசுக்கு தனது ஆன்மாவைக் கொடுப்பார்.
ஃபாஸ்ட் கதை பற்றி மேலும் அறிந்து கொள்ள 🔎 John faust deal என கூகுளில் தேடிப் பாருங்கள்.


நோர்ஸ்ஃபயர் அரசு மக்களின் ஆதரவைப் பெற மத வெறியை பயன்படுத்துகிறது. அரசாங்கம் சார்பில் உள்ள மதகுரு அந்தோணி லில்லிமன்  மதத்தின் வழியாக ஆதிக்கச் சக்திக்கு இணங்க மக்களை வழிநடத்துகிறார்.
ஒரே இனம், ஒரே மதம் போன்ற பிரச்சாரத்தின் கீழ் மற்ற இனங்கள் மதங்கள்  வெறுத்து ஒதுக்கப்படும். 


'கண்' பிரிவின் தலைவர் கொன்ராட் ஹேயர் தன் மனைவி ஹெலனுக்கு அடங்கியவராகவும் பயப்படுபவராகவும் இருக்கிறார்.

இந்த கட்டங்களில் ஹேயரின் வீடியோ கண்காணிப்பு பணியை ஹெலன் கேலி பண்ணுகிறாள்.



விரல்களின் (ஃபிங்கர்) தலைவர் டெரக் அல்மோன்ட் தன் மனைவி ரோஸ்மேரியை அலட்சியப்படுத்துபவராகவும் அவமதிப்பவராகவும் உள்ளார். 

ஏழு பாவங்கள்:



🔎 Seven deadly sins

பைபிள் கூறுவதன்படி ஏழு பாவங்கள்:

1,தற்பெருமை
2,பேராசை
3,கோபம்
4,பொறாமை
5,காமம்
6,பெருந்தீனி
7, சோம்பல்


Vயிடம் தான் செய்து கொண்ட உதவும் ஒப்பந்தத்தின் காரணமாக தினமும் கன்னி வேட்டையாடும் மதகுரு லில்லிமன் முன்னாக கவரும் தோற்றம் கொண்டு வந்து நிற்கிறாள் ஈவி ஹம்மாண்ட்.

அவள் பலியாடா?
அல்லது தூண்டில் புழுவா? 





தங்கத்தில் எரியும் என் வில்லை என்னிடம் கொண்டு வா...


வில்லியம் பிளேக் எழுதிய 'ஜெருசலேம்' கவிதையின் சில வரிகள் ஆலன்மூரால்  Vயின் இங்கிலாந்து விடுதலைக்கான எண்ணவோட்டங்களாக பொருத்தமாக எடுத்தாளப்பட்டுள்ளன. 




1804ல் வில்லியம் பிளேக் எழுதிய 'ஜெருசலேம்'  ஒரு புகழ் பெற்ற கவிதை.

'ஜெருசலேம்' முழுமையான கவிதை:


பண்டைய காலத்தில் அந்த பாதங்கள் இங்கிலாந்தின்  பச்சை  மலைகளில்  நடந்ததா? 

இங்கிலாந்தின் இனிமையான மேய்ச்சல் நிலங்களில் கடவுளின் புனித ஆட்டுக்குட்டி காணப்பட்டதா? 

 மேகமூட்டமான எங்கள் மலைகளின் மேல் தெய்வீகம் பிரகாசித்ததா? 

இந்த இருண்ட சாத்தானிய ஆலைகளுக்கு மத்தியில் ஜெருசலேம் இங்கு கட்டப்பட்டதா? 

எரியும் தங்கத்தின் என் வில்லை என்னிடம் கொண்டு வா: 

ஆசையின் அம்புகளை என்னிடம் கொண்டு வா: 

என் ஈட்டியை என்னிடம் கொண்டு வா:

 மேகங்களே! 
என் நெருப்பு ரதத்தை என்னிடம் கொண்டு வா. 

இங்கிலாந்தின் பசுமையான இனிமையான நிலத்தில்

 ஜெருசலேமை உருவாக்கும் வரை 

நான் மன சண்டையை நிறுத்தமாட்டேன், 

என் வாள் என் கையில் தூங்காது.


*****


'ஜெருசலேம்'  கிறிஸ்தவர்களின் புனிதமான நகரம்.  

இயேசு கிறிஸ்துவின் சரித்திரத்தில்  குறிப்பிடப்படாத 10 வயது முதல் 30 வயது வரையான காலகட்டத்தில் இயேசு இங்கிலாந்துக்கு சென்றதாக ஒரு கருத்து உண்டு.

சாத்தானிய ஆலைகள் :

தொழிற்சாலைகளில் அயராது உழைக்கும் மக்களின் மீதும் குழந்தை தொழிலாளர்கள் மீதும்  வில்லியம் பிளேக் அனுதாபம் கொண்டிருந்தார். தொழிற்புரட்சி மக்களின் வாழ்க்கையை இயந்திரமயமாக்கி விட்டதாகக் கருதினார்.

இத்தகைய
 இங்கிலாந்துக்கு இயேசு வந்திருந்தாரா? 
 'ஜெருசலேம்'  (சொர்க்கம் போன்ற ஒரு சிறந்த இடத்துக்கான உருவகம். ) 
இந்த சாத்தானிய ஆலைகளுக்கு மத்தியிலும் கட்டப்பட்டதா? என வியப்பதாக பிளேக் எழுதுகிறார்.

எரியும் தங்கம்,  வில்,  அம்பு, ஈட்டி போன்றவை தொழிற்சாலைகளுக்கு எதிரானஅவரது உணர்வுகளைக் குறிக்கிறது.

நெருப்பு ரதம்: பைபிளில் சொர்க்கத்துக்கு நெருப்பு ரதத்தில் அழைத்துச் செல்லப்பட்ட எலியா தீர்க்கதரிசியின் கதை.

இங்கிலாந்தின் செழிப்பு மீட்கப்படும்வரை தான் ஓய்வதில்லை என பிளேக் கவிதையை முடிக்கிறார்.




வில்லியம் பிளேக்கின் ஜெருசலேம் கவிதை பற்றி மேலும் அறிந்து கொள்ள
🔎 William blake Jerusalem  poem என கூகுளில் தேடிப்பாருங்கள்.



போருக்குப் பின் அழிந்து போன வயலட் கார்சன் ரோஜா செடிகள் V யின் இருப்பிடத்தில் வளர்கின்றன.

V ஒரு ரோஜாவை எடுத்துச் செல்கிறான். அது மதகுரு அந்தோணி லில்லிமனுக்காக இருக்கலாம்.
 
V தன்னுடைய தாக்குதல்களில் அந்த ரோஜாவை விட்டுச்செல்வதன் காரணத்தை வருங்காலம் நமக்கு அறிவிக்கலாம்.

******

தொடரும்....


No comments:

Post a Comment