Friday, September 24, 2021

1, V என்றால் வஞ்சம்




மகிழ்ச்சி சுதந்திரத்தைவிட மதிப்புமிக்கதா? 

V for vendetta 


 


'வி என்றால் வஞ்சம்' வெறும் விறுவிறுப்புக்காக வாசித்துக் கடந்து செல்லக்கூடிய சராசரிக் கதையல்ல, அதன் ஒவ்வொரு பக்கத்திலும் பல மறைமுகமான விஷயங்கள் புகுத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு கட்டத்தையும் கவனமாக வாசிக்கும்போது அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.

வி என்றால் வஞ்சம் பற்றி நண்பர்களிடம் கேட்டு அறிந்து கொண்டவற்றையும்,  இணையத்தில் தேடித் தெரிந்து கொண்டவற்றையும், கதையை வாசித்துப் புரிந்து கொண்டவற்றையும்  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 



1980களில் 

ஒரு அனு ஆயுதப் போருக்குப் பின்பான இலண்டனில் Norsefire எனும் பாசிசக்கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது.

அடக்குமுறை மிகுந்த அந்த ஆட்சியிலிருந்து இலண்டனை மீட்க V என்ற புதிரான மனிதன் வன்முறையுடன் கூடிய புரட்சியை முன்னெடுத்தான்.



விதியின் குரல் என்பது அரசாங்கத்தின் பிரச்சார அலைவரிசை ஆகும்.

அரசாங்கத்தின் துறைகள் :

கண், ( வீடியோ கண்காணிப்பு) 

காது, ( தொலைபேசி ஒட்டுக்கேட்பு)

மூக்கு, (தடயவியல் துறை)

விரல்கள் (காவல் துறை)

என அழைக்கப்படுகிறது.

ஜோர்டான் டவர் எனும் கட்டிடம் வாய்ப்பகுதியாகக் குறிப்பிடப்படுகிறது.

இப்படியாக அரசாங்கம் ஒரு இராட்சச மனிதத்தோற்றம் கொண்டுள்ளது. 

அதன் தலைமையாக 'விதி' என்னும் கம்ப்யூட்டர் உள்ளது.

'விதி' கம்ப்யூட்டரின் ஆணைகளை செயல்படுத்துபவர் 'தலைவர்'

'விதியின் குரல்' எனும் ரேடியோ அலைவரிசை மூலம் இந்த அரசமைப்பு தன் செய்திகளையும் அறிவிப்புகளையும் பிரச்சாரம் செய்கிறது.


V யின் திட்டம் இந்த இராட்சசக் கட்டமைப்பின் ஒவ்வொரு அங்கமாக முடக்கி அரசை வீழ்த்துவது.

வானிலையையும் மழை பொழியும் நேரத்தையும் துல்லியமாக அறிவிக்கும்  அளவு அறிவியல் முன்னேற்றமடைந்த அந்த அரசில் இரவு ஒன்பது மணிவரை  தொழிலாளிகள் வேலை செய்கின்றனர்.


 
மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன.


பிரச்சாரத்தில் அந்தப் பகுதிகள் தடை செய்யப்பட்டதன் காரணம் விளக்கப்படவில்லை. விளக்க வேண்டிய அளவுக்கு அரசு மக்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.




"இறைச்சி ரேஷனில் வழங்குவது முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது."

உறுதியாகச் சொல்ல முடியாது என்பதான ஒரு செய்தி.

இவள்தான் 'ஈவி ஹம்மாண்ட்' பெற்றோரை இழந்தவள். 

(பைபிளில் உள்ளபடி உலகின் முதல்  மனிதர்களான ஆடம் ஈவ் என்பதில் [ஆதாம் ஏவாள்] 'ஈவ்' என்ற பொருளில் அமைந்த பெயர். 
எவி, ஏவி எனவும் உச்சரிக்கப்படுகிறது.)

"இந்த நல்ல செய்தியுடன் இதைப்போலவே"

முந்தைய செய்தியைப் போன்றே உறுதியாகச் சொல்ல முடியாத மற்றொரு செய்தி.
 (ஒரு செய்தியும் 'உறுதியா' சொல்ல முடியாதா? என்பதுபோல ஆலன்மூரின் எள்ளல் நிறைந்த வரிகள்.)

வறுமை காரணமாக விபச்சாரத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.

"மிகப்பெரிய தீவிரவாதக்குழு என்று நம்பப்படும்..."

அது அரசுக்கு எதிரான  ஒரு சிறு போராட்டக்குழுவாக இருக்கலாம். அரசுக்கு ஆதரவாக ஊடகங்கள் செய்திகளை திரிப்பது எப்போதும் நடப்பதே.

இது V யின் இரகசியமான கலைக்கூடம். மற்றும் அவனுடைய இருப்பிடம். இங்கு அராஜக அரசால் அழிக்கப்பட்ட புத்தகங்கள், ஓவியங்கள், இசை ஆல்பங்கள் போன்றவற்றை V பாதுகாத்து வருகிறான்.


அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆடம்பரத்தில் திளைப்பதும் குடிமக்கள் விபச்சாரத்துக்கு ஆடை உடுத்துவதுமான முரண்பாட்டை இக்கட்டம் சித்தரிக்கிறது.

" முன் எப்போதையும் விட சிறப்பாக"

இச்செய்தி ஒலிபரப்பாகும்போது V கையுறை அணியும் காட்சி,

செய்தியில் உண்மை மூடி மறைக்கப்படுகிறது.

என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.


"பிரிட்டனை மீண்டும் சக்திமிக்க நாடாக..."

என்ற செய்தியின்போது V முகமூடியை கையில் எடுப்பது, நாட்டின் முன்னேற்றத்துக்காக அவன் மூகமுடி அணிந்து தயாராவதை உணர்த்துகிறது.

Guy fawkes என்பவர் நவம்பர் ஐந்து1605ல் பாராளுமன்றத்தை வெடிமருந்து மூலம் தகர்க்க முயன்று தோற்றுப்போய் கைது செய்யப்பட்டு மரணத்தை தழுவியவர். அரசுக்கு எதிரான கலகக் குரலாகப் பார்க்கப்பட்ட அந்த நிகழ்ச்சியின் நினைவாக நவம்பர் ஐந்து 1605 கைபாக்ஸ் நாளாக பிரிட்டனில் கொண்டாடப்படுகிறது.

அதே நாளில்தான் V தன் புரட்சியை ஆரம்பிக்கிறான்.
V அணிவது கைபாக்ஸின் முகத்தோற்றம் கொண்ட முகமூடியைதான்.


யார் இந்த V?

V ஒரு மர்ம மனிதன். இவனைப்பற்றிய சொந்தத் தகவல்கள் ஏதும் இல்லை. ஆணா?  பெண்ணா? என்பது கூடத் தெரியாது. அவனது முகத்தைப் பார்த்தவர்களும் எவருமில்லை.
மரணத்தருவாயிலிருந்த ஒரே ஒரு பெண்மணியைத் தவிர...

Vயின் முகத்தைப் பார்த்த அப்பெண்மணி சொன்னார்.

மிக அழகு! 

(இந்த கிராஃபிக் நாவலின் அத்தியாயங்களின் ஆங்கிலத் தலைப்புகள் V என்ற எழுத்திலேயே துவங்குவது இன்னொரு சிறப்பு!) 
இந்த கிராஃபிக் நாவலின் அத்தியாயங்களின் தலைப்புகள் ஆங்கிலத்தில் V என்ற எழுத்திலேயே ஆரம்பிப்பது இன்னொரு சிறப்பு!  

நோர்ஸ்ஃபயர் அசாங்கத்தின் ஃபிங்கர்மேன் என்னும் காவல்துறை ஒரு இளம்பெண்ணை தெருவில் கற்பழித்துக் கொல்லும் அளவுக்கு கணக்கற்ற அதிகாரம் கொண்டதாக உள்ளது.

 சட்டத்தை அமலாக்கம் செய்பவர்கள்
சமூக விரோதிகளை விட ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். 



V யின் உரையாடல்கள் பெரும்பாலும் நாடக பாணியிலும் கவிதைகளாகவும் உள்ளது. நாடகங்கள், புத்தகங்கள், இசையில் ஈடுபாடு கொண்டவராக அறிய முடிகிறது.

ஃபிங்கர் அதிகாரிகளுடன் மோதும் இந்தக்கட்டத்தில் பொருத்தமாக ஷேக்ஸ்பியரின் மக்பெத் நாடகத்திலிருந்து கவிதை வரிகளை உச்சரிக்கிறார்.




ஒரு கொண்டாட்டம்: கைபாக்ஸ் வெடிமருந்து சதி நடந்த நவம்பர் ஐந்து 1605 நாளின் கொண்டாட்டம்.

ஒரு ஆரம்பம்: அரசுக்கு எதிரான V யின் புரட்சி இந்நாளில் ஆரம்பம்.

 


"என்னைக் கொல்ல நினைத்தாயா? கொல்வதற்கு இந்த ஆடைக்குள் சதை அல்லது இரத்தம் இல்லை. ஒரு சிந்தனை மட்டுமே உள்ளது. சிந்தனைகள் குண்டு துளைக்க முடியாதவை. "

V for vendetta



* தொடரும்...


முதல் அத்தியாயம் பற்றிய முந்தைய முழுமையான பதிவுக்கு:

Saturday, June 27, 2020

இந்த இடம்தான் அந்த இடம்...



முள்ளி வாய்க்கால் போயிருந்தேன்- அந்த
முல்லைத் தீவையும் மோதி வந்தேன்
முள்ளில் கிழிந்த என் கண்களிலே- நீர்
முட்டித் தெறித்ததை யாரறிவார்?

ஆனந்தபுரத்தை கடக்கையிலே என் ஆவி துடித்ததை என்ன சொல்ல?
நானந்த துயரம் சொல்வதற்கு- என்
நா படும்பாடு கொஞ்சமல்ல

இந்த இடம்தான் அந்த இடம்- எம்
இலட்சம் உயிர்களைக் கொன்ற இடம்
சொந்தம் சொல்லி நானழுதால்- விண்
சுற்றும் கோள்கள் நின்றுவிடும்

சாகாத காற்றின் சப்தங்களில்- எம்
சனங்களின் அழுகுரல் கேட்டறிந்தேன்
ஆகாயம் எரித்த சாம்பல் துகள்- மண்ணில்
ஆங்காங் கலைவதை கண்டறிந்தேன்

எரிவாய்ப் பட்ட சருகுகளாய்- உடல்
இற்றுப் போவர் எத்தனையோ?
நரிவாய்ப் பட்டநண்டுளாய்- இங்கு
நசுங்கிய சிசுக்கள் எத்தனையோ?

தாயிடம் பால்கொண்ட பிள்ளையரை- ஒரு
தடயம் இன்றியே எரித்தாராம்
ஆயிரம் எலும்புக்கூடுகளை- சீன
அமிலம் ஊற்றியே அழித்தாராம்

படர்ந்து கிடக்கும் வெறுமையிலே- இனம்
பட்ட பெருந்துயர் சில அறிவோம்
நடந்த மெய்க்கதை மொத்தமென்ன- ஏ
நந்திக்கடலே நீயறிவாய்

தோண்டு மிடத்தில் தங்கம் வரும்- என்று
சொல்லிக் களித்த ஈழத்தில்
தோண்டு மிடத்தில் குறுதி வரும்- என்று
சொல்லிப் புலம்பும் நிலையுற்றோம்

மைநீட்டிச் செய்த நிறம் படைத்த- பல
மங்கையர் கூந்தலில் பூவுமில்லை
கைநீட்டிப் பார்த்தேன் தோழர்களே- சிலர்
கரங்களுமில்லை கைகொடுக்க

மண்ணில் விழுந்த மழைத்துளிகள்- அவை
மண்ணில் தொலைந்து போவதில்லை
எண்ணில் அடங்கா உயிர்த் தியாகம்- வெறும் இறப்புக் கணக்கில் சேர்வதில்லை

அழிந்துபோனது போலிருக்கும்- ஆயின்
அருகம் புல்லுக்கு அழிவேது?
பொழியும் ஒரு துளி பட்டவுடன்- அது
பொட்டென் றெழுமே அழியாது

எந்த யுகத்தில் போர்களில்லை- அட
எந்த யுத்தத்தில் தோல்வியில்லை
அந்த யுகத்தை எருவாக்கு- நீ
அடுத்த யுகத்தை உருவாக்கு

#வைரமுத்து

Saturday, February 2, 2019

ஹலோ ஷங்கர்லால்!




தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் காமிக்ஸ் கதைகள் பெரும்பாலும் அதன் அசல் சுவையை இழந்தே இங்கு வந்தடைகின்றன.  பல ஆண்டுகள் முன் படித்த ஜில் ஜோர்டான் கதை ஒன்றின் ஆங்கிலப்பதிப்பு சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது.  அந்நாளில் மூன்று பதிவுகளின் வாயிலாக "கனவுகளின்  காதலர்" கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகளை தேட முற்பட்டுள்ளேன் !

  பொதுவாக அனைத்து துப்பறியும் கதைகளும் கதையின் முடிவில் தன்னிலுள்ள மர்மங்களை வாசகனுக்கு தெளிவு படுத்தி விடும்.

ஆனால் கதை முடிந்த பின்னும் மர்மங்களைத் தேட வைத்த கதை இது ஒன்றாகத்தான் இருக்கும்!

வசனங்களை நான் புரிந்து கொண்ட அர்த்தங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் எடுத்துக் கூறி விளக்க வேண்டுகிறேன்! 






அலை செய்த கொலை !


 



 

இது  மொட்டைக் கடுதாசியா இருக்கேன்னு நான் அப்பவே யோசிச்சிருக்கனும்!
இதை எழுதுனவன் மட்டும் என் கையில சிக்குனா...




 
என்னை இளிச்சவாயனா நினைச்சுருக்கானா... 

( நன்றி : நண்பருக்கு )




 
தமாஷ் பண்றதை எல்லாம் பெருசு படுத்த மாட்டேன்,  ஆனா இது வரம்பு மீறுனதா இருக்கு !


  




 இல்லை! அது ஒரு வெட்கக் கேடான விஷயம்.   உன் ஓட்டல் மூட்டைப் பூச்சிகள் மீதி வைச்சதை மீன்கள் காலி பண்ணி விட்டன!  சரி!  சொல்லு கேட்கிறேன்! 









பாரீஸை சேர்ந்த நிகிடா ஜிக்ஸ் எனும் அரும்பொருள் சேகரிப்பாளர் இங்குள்ள  "டெவில் ஸ்ட்ரெய்ட்"டில்*  செல்லும் போது அலையில் சிக்கி இறந்து விட்டார் சார்! ஆமாம்,  கார் காலியாக உள்ளது!... அப்படியில்லை,  பழுது ஏற்பட்டிருக்கலாம்...


( *Devil's strait : எமனின் பாதை / பரலோகப் பாதை எனப் பொருள் படும் !



(பெட்ரோல் தீர்ந்து போயிருக்கிறது)

 கதையின்  முக்கியமான சஸ்பென்ஸ் அம்போ! 





சில நாட்களுக்குப் பிறகு, ஜில் ஜோர்டான் துப்பறியும் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில்.. .


இந்தப் படத்தில் எழுத்துகளை ஏன் கலர் பூசி மறைச்சுருக்கு ?


அவருடைய உடல் இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லையா ?

  இல்லை!  போலீஸாரிடம் பேசினேன்,  தீவில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில், பாதையின் 
நடுப் பகுதியில் சம்பவம் நிகழ்ந்திருப்பதால் நம்பிக்கையில்லை என்கிறார்கள். 




பாஸ்!   ஜாக்கிரதை!
இங்கே பொறி* வாசனை அடிக்கிறதை உணர முடியுது!

(*கண்ணி / சதிவலை )


பொறியின் வாசனை பூஞ்சை  போல இருக்குமெனில், ஆம்! இங்கு பொறி வாசனை அடிக்கிறதுதான்!


( இந்த வசனத்தில்   ஒரு மென் நகைச்சுவை உள்ளது. 

லிபெல் உள்ளுனர்வின் உந்துதலால், இங்கு பொறி வாசம் அடிப்பதாக சொல்ல,  அந்த இடத்தில் அடிக்கும் தாங்க முடியாத பூஞ்சை வாடையை  ( துர்நாற்றத்தை ) நுட்பமாக கிண்டல் செய்கிறார் ஜில் ஜோர்டான் .)

(நன்றி : நண்பருக்கு) 







அது மிளகாய்த்தூள் இல்லை!
மிளகுத்தூள்! 



அப்டேட்... அப்டேட்...  அப்டேட்...

5-4-2020

கியர் போட்ட கண்ணாளா!


""ஆனால், பக்கம் 237ல் கட்டம் 11ல் ஹென்ரிக்கு விளக்கம் தரும் ஜில்.... பின்னர் காரை கியரில் போட்டு ஓடச் செய்திருக்கிறான் என்கிறார். நல்லது. அவர் யார் காரை என்ன கியர் போட்டு எங்கு ஓடச் செய்தார் என்பதை எனக்கு தயை கூர்ந்து யாரேனும் சொல்ல இயலுமா?! பாரிஸ், லண்டன், லாப்ரான் என ஓடி ஓடி விசாரணை செய்து விட்டு, குற்றவாளி எவ்வாறு குற்றங்களை நிகழ்த்தி இருப்பான் என்பதையும் கண்டுபிடித்து விட்டு தன் வாடிக்கையாளரிடம் துப்பறிவாளர் ஜில் ஜோர்டான் தரும் அந்த விளக்கம் ஒன்றுதான் உண்மையில் ஐரோப்பிய காமிக்ஸ்களின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாக கருதக்கூடிய ஜில் ஜோர்டான் பாத்திரத்தை தமிழில் கொன்று போட்டிருக்கும் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறது. தமிழில் விடிய விடிய ராமன் கதை விடிந்தால் ராமன் சீதைக்கு சித்தப்பா என்பார்கள் அல்லவா அதற்கு இதைவிட சிறப்பான உதாரணத்தை சமீபகாலத்தில் நான் கண்டிருக்கவில்லை!

அப்படியானால் அந்த உரையாடல் குமிழியில் இருக்க வேண்டிய வசனம் என்ன? உங்களிற்கு காமிக்ஸ் என்பதில் உண்மையில் ஆர்வமும், ப்ரியமும் இருந்தால் அதற்கான பதிலை நீங்களே தேடிக் கண்டடைந்து கொள்வீர்கள். ""






நண்பர் ஒருவரிடம் இது குறித்து விவாதித்த போது தெளிவான விளக்கங்கள் கொடுத்து உதவினார்!
அவர் பகிர்ந்து கொண்டதை உங்களுக்கும் அறிய தருகிறேன்!

ENGRENAGE எனும் பிரெஞ்சு  வார்த்தை சூழ்நிலைக்கேற்ப பல அர்த்தங்கள் தரக்கூடியது. 

பொதுவாக அவ் வார்த்தை "பொறிகளின் இயக்கம்" என பொருள் படும்.

அதே வார்த்தை மோட்டார் வாகனங்களுக்கு "கியர்" போடுதல் என்றும் பொருள் தரக் கூடியது. 

இந்தக் கதையின் அந்த குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்,

"அவன் ஆரம்பித்து வைத்த சதிகளின் ஓட்டத்தில் அவனே சிக்கிக் கொண்டான்" என்பதே பொருள்படும்.

தமிழில் பொருத்தமாக "அவன் விரித்த வலையில் அவனே மாட்டிக் கொண்டான்" என அமைக்கலாம்.

ஆங்கிலத்தில் இக்கதையை வாசித்தவர்கள்  இதன் அர்த்தத்தை சரிவர புரிந்து கொண்டிருப்பார்கள்...





*******

தெளிவு படுத்திய நண்பருக்கு இதய நன்றிகள்! 



வணக்கம்! 





Sunday, March 11, 2018

முதன் முதலாய் அம்மாவுக்கு...



 "பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே !
காசு வந்த வேளையில
பாசம் வந்து சேரலையே !
"





முதன் முதலாய் அம்மாவுக்கு...

ஆயிரம்தான் கவி சொன்னேன்
அழகழகா பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே! 

காகிதத்தில் மகன் எழுத்து
காத்தெல்லாம் மகன் பாட்டு
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி பேசலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதியென்ன லாபமுன்னு
எழுதாமப் போனேனோ ? 

பொன்னையா தேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்பு வலி பொறுத்தவளே,  

வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில் நீ சுமந்ததில்ல
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு! 

கண்ணு காது மூக்கோட
கருப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையில
என்னென்ன நினைச்சிருப்ப ? 

கத்தி எடுப்பவனோ ?
களவாடப் பிறந்தவனோ ?
தரணியாள வந்திருக்கும் ?
தாசில்தார் இவன்தானோ ? 

இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாம
நெஞ்சூட்டி வளத்த உன்னை
நினச்சா அழுகைவரும். 

கதகதண்ணு கழி கிண்டி
கழிக்குள்ளே குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ணெய்
கலந்து தருவாயே... 
தொண்டையில அதுயிறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா! 

கொத்தமல்லி வறுத்து வச்சிக்
குறுமொளகா ரெண்டு வச்சு
சீரகமும் சிறுமிளகும்
சேர்த்து வச்சு நீர் தெளிச்சு
கும்மி அரச்சு நீ
குழகுழன்னு வழிக்கையில
அம்மி மணக்கும்
அடுத்த தெரு மணமணக்கும். 

தித்திக்க சமைச்சாலும்
திட்டிக்கிட்டே சமைச்சாலும்
கத்திரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்.

கோழிக் கொழம்பு மேல
குட்டிக்குட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சி ஊரும்.

வறுமையில நாமபட்ட
வலி தாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன் ! 

பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே !
காசு வந்த வேளையில
பாசம் வந்து சேரலையே ! 

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கயில
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போனபின்னே...

அஞ்சாறு வருசம் உன்
ஆசை முகம் பாக்காமப்
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே.

படிப்பு படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே ! 

பாசம் கண்ணீரு
பழைய கதை எல்லாமே
வெறிச்சோடிப் போன
வேதாந்தமாயிருச்சே ! 

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியா கூட்டி வந்து
கரை சேத்து விட்டவளே,

எனக்கொன்னு ஆனதுன்னா
உனக்கு வேற பிள்ளை உண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா ?
.............................................. வைரமுத்து

★*******★*******★*****★******★******★


‘‘பாபாவில் உங்களுக்குப் பிடித்த பாட்டு?’’
‘‘எல்லாப் பாட்டும் பிடிக்கும். அதில் இடம்பெறாத பாடல்களில் ஒன்று ரொம்பப் பிடிக்கும். பாபா மூட்டை சுமக்கும்போது தாய் சுஜாதாவின் கண்ணில் கண்ணீர் வழியச் செய்யும் பாட்டு, இப்படி மலர்ந்து மலர்ந்து எனக்கு உள்ளேயே உலர்ந்துபோன பூக்கள் ஓராயிரம்…


 கண்ணுக்கினிய மகனே!
உன்னை
கருவில் சுமந்தேன் மகனே!

கருவறை கழிந்து விழுந்த பின்னே
கையில் சுமந்தேன் மகனே!

மார்பில் தாய்ப்பால் பருகும்போது
மடியில் சுமந்தேன்
மகனே!

தூங்கும்போதும்
ஏங்கும்போதும்
தோளில் சுமந்தேன் மகனே!

கையை மீறி வளர்ந்தபோது
கண்ணில் சுமந்தேன் மகனே!

நெஞ்சு தானாய் நிற்கும் வரைக்கும்
நெஞ்சில் சுமப்பேன் மகனே!

சுமக்கப் பிறந்தவள் நான் தானே – நீ
சுமந்து அலைவது ஏன் மகனே!

மூட்டை சுமக்கும் கூலியல்ல – நீ
நாட்டைச் சுமக்கப் பிறந்தவனே.

................வைரமுத்து

***★****★****★****★****★*****★*****★****★****★****

ஒரு காலத்தில் ஒரு குளம் இருந்தது ...

தண்ணி பெருத்த குளம்
தாமரை பூத்த குளம்
ஊருக்குத் தெம்பக்கம் 
ஒருக்களிச்சுப் படுத்த குளம். 

உள்காட்டு மூலையில 
ஊர் பொறந்த வேளையில
கர்ண மகராசா 
கரையெடுத்து வைச்ச குளம்.

மழையோட நீர் வாங்கி
மண்ணோட நிறம் வாங்கி
செந்தண்ணியானாலும்
சீனித்தண்ணியான குளம்.

சாலி மரமிரண்டு 
தண்ணியெல்லாம் நிழல் பரப்பி
கரையோரம் குடை பிடிச்சு
காவலுக்கு நின்ன குளம்.

காடுகரை போனவர்க்கும் 
காக்கை குருவிகட்கும்
ஆடுமாடு அத்தனைக்கும்
அனுசரணையான குளம்.

ஐப்பசி கார்த்திகையில் 
அடைமழைய உள்வாங்கி
நெறமாசப் பொம்பளையா
நெறப்பெருக்கா நின்ன குளம்.

வாழ்ந்து கெட்ட சீமாட்டி
வளவி மட்டும் போட்டது போல்
கோடையிலும் குடிதண்ணி
கொஞ்சூண்டு வைச்ச குளம்.

சித்திரையில் சிலுசிலுக்க
மார்கழியில் கதகதக்க
மாயமோ மந்திரமோ
மந்திரிச்சு விட்ட குளம்.

தவக்கா சத்தமிட 
சரஞ்சரமா கொக்கு வர
சொட்டை வாளை மீன் தவ்வ
சுறுசுறுப்பா இருந்த குளம்.

பொசுக்குன்னு துணி மாத்தி
விசுக்குன்னு கரையேற
ஆம்பளைய பொம்பளைய
அரைகுறையா பார்த்த குளம்.

தாகமுன்னு வந்தாலும்
தற்கொலைக்கு வந்தாலும்
வாங்க மக்கா வாங்க மக்கா
வாய் நிறைய சொன்ன குளம்.

மாரோட புள்ளை கட்டி
வயிறோட கல்லு கட்டி 
செவனம்மா பொணமாக
செத்து மெதந்த குளம்.

மனுஷப்பய கூடி 
மண்ணை ஏமாத்த
மழையெல்லாம் கூடி 
மனுஷனை ஏமாத்த

இன்னிக்குத் தேதிக்கு
இல்லேன்னு போன குளம்.
என்னைக்கு நெனைச்சாலும்
என் கண்ணுல உப்புக்குளம்.

.......................வைரமுத்து

★★★★★

இதயத்தில் என்னென்ன வேட்கை
இது இடைவேளை இல்லாத வாழ்க்கை
வாழ்வோடு போராட்டம் இங்கே - இதில்
வாழ்கின்ற நிமிஷங்கள் எங்கே?

....................வைரமுத்து