Monday, January 24, 2022

பாலைநிலத்தின் தியாகிகள்

 



அந்த ஆண்டு வசந்தகாலத்தின் வருகை மெதுவாக இருந்தது. பனி சியோக்ஸ் நிலத்தை இன்னும் போர்த்தியிருந்தது. பசியும் குளிரும்  மக்களை  வாட்டி வதைத்தது, 
புற்களுக்கும் உணவுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு மக்களும் விலங்குகளும் பசித்த வயிற்றுடன் இருந்தனர்.

ஆண்டின் இந்நேரத்தில் பனி விலகி இருக்க வேண்டுமே  என சின்ன இடி திகைப்புடன் கூறியது.

எருமை இறைச்சியை உலர வைத்துச் சேமிக்கப்படும் பெம்மிகன் எனும் மதிப்பான உணவின் இருப்பு தீர்ந்து போயிருந்தது.


யகரியின் சியோக்ஸ் இனத்தினர் எருமை மந்தையின் இப்போதைய இருப்பிடத்தை அறிந்து வர, சாம்பல் ஓநாய் எனும் வீரனை அனுப்பி விட்டு தற்போதைய முகாமை எருமை மந்தையின் அருகில் அமைக்கத் தீர்மானித்துக் கிளம்பினர்.

எருமை விதை சின்ன இடியின் மீது சவாரி செய்ய விரும்புகிறான். ஆனால் அவன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் சின்ன இடி அவனை தூக்கி எறிகிறது. வானவில் சின்ன இடியை புகழ்ந்து பாராட்டிப் பேசி சின்ன இடி மீது சவாரி செய்வதில் வெற்றி பெறுகிறாள்.

அப்போது எருமை மந்தையின் இருப்பிடத்தை தேடிச் சென்ற சாம்பல் ஓநாய் திரும்பி வருகிறான். அங்கிருந்து ஒருநாள் பயணத் தொலைவில் வளமான எருமைக்கூட்டம் இருப்பதாக தெரிவிக்கிறான்.




இனத்தின் தலைவர் எருமைகள் பெரும் ஆவிகளின் பரிசு என்றும், வகோண்டா  தன் பலத்தை மக்களுக்கு அளிக்க அவற்றை உருவாக்குவதாகவும் கூறுகிறார். அன்றிரவு துணிச்சல் மிக்க வீரர்கள் எருமைகளுக்கு மரியாதை செய்யும் விதமாக நடனம் ஆடுகிறார்கள்.

மறுநாள் வீரர்கள் எருமை வேட்டைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள். வானவில் யகரியை விறகு சேகரிக்க அழைக்கிறாள். 



அப்போது யகரியை சந்திக்கும் பெரும் கழுகார் இம்முறை குளிர்காலம் சியோக்ஸ்களுக்கு நீண்டதாகவும்,  எருமை வேட்டையர்களின் பாதை கடினமானதாகவும் இருக்கும் என தெரிவிக்கிறார். மேலும் விபரம் அறிய யகரி முயலும் போது, மணல்வெளியின் மத்தியில் மேற்கொண்டு பேசுவோம் என கூறிச்செல்கிறார்.

வானில் மேகங்கள் கறுப்பதைக் காணும் யகரி புயலின் ஆரம்பத்தை உணர்கிறான்.




 எருமை வேட்டையர்கள் சாம்பல் ஓநாயை பின்பற்றி  காற்றினூடாக எருமை மந்தை காணப்பட்ட இடத்தை வந்தடைகிறார்கள். அங்கே மந்தை காணப்படவில்லை , அவற்றின் தடங்களும் புயல் காற்றினால் துடைக்கப்பட்டுள்ளன.
அப்போது புயலும் மழையும் வலுக்கிறது. இடி ஒன்று மரத்தின் மீது விழுந்து பற்றி எரியச் செய்கிறது. 

வகோண்டா கோபமாக இருப்பதாகவும், வேட்டைக்கு இது உகந்த நேரமில்லை என்றும் வகோண்டா சாந்தமடையும் வரை மந்தையை தேடுவதை நிறுத்தி விட்டு இரவைக் கழிக்க பாதுகாப்பான இடத்தை கண்டறிய முடிவு செய்கின்றனர்.


அன்றைய இரவு முகாமில் இடியும் புயலும் சூழ்ந்திருந்தது. பயங்கரமான இடிச்சத்தம் கேட்டு உறக்கத்திலிருந்து விழித்தான் யகரி. அவனுக்கு, சின்ன இடிக்கு இது மிகவும் மோசமான இரவாக இருக்கும் என்ற  சிந்தனை எழுந்தது. 

புயலுக்கும் இடிக்கும் நடுவில் சின்ன இடி இருக்கும் குதிரைப்பட்டிக்குச் செல்கிறான்.


********



நீ மிகவும் பயந்து விட்டாயா சின்ன இடி?

நான் இது போன்ற ஒரு புயலைப் பார்த்ததில்லை.

என்னாச்சு?

அமைதிப்பாறையாரே! இடிச்சத்தம் உங்களையும் எழுப்பி விட்டதா?

வயது ஏறும்போது உறக்கம் விட்டுச்செல்கிறது.

புயலைக்கண்டு உங்களுக்கு அச்சமில்லையா?

வானமும் பூமியும் நமது நண்பர்கள் யகரி. 
 
ஆனாலும் நம் வேட்டை வீரர்களைப்பற்றி கவலையாக உள்ளது.


அவர்களின் கஷ்டங்கள் இரவோடு முடிவுக்கு வந்து விடும். அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

இருள் வேட்டையர்களின் தற்காலிக தங்குமிடத்தை சூழ்ந்திருந்தது.

புயல் அமைதியடைந்து வருகிறது. இப்போது நீ தூங்க முடியும் யகரி.

நான் வளர்ந்த பின் ஒருபோதும் இடிக்குப் பயப்பட மாட்டேன்.



********


உறக்கத்தில் யகரி இரு பெரும் கொம்புகளிடையே சின்ன இடி மீது செல்வது போன்று கனவு கண்டான். தகிக்கும் பாலைநிலத்தைக் கடந்து எருமை மந்தையை அடைகிறான். ஒரு வெள்ளை எருமை நீரில் நனைவதைக் காண்கிறான். எருமை மந்தை அவனைப் பின்பற்றி வருவதையும் கண்டான்.

காட்டெருமைகள் தன்னை நசுக்கப் போகிறது என அஞ்சிய வேளையில் கனவு கலைந்து விழிக்கிறான்.


கனவில் எருமை மந்தையைக் கண்டதை தாயாரிடம் கூறுகிறான் யகரி. மொத்த பழங்குடியினரும் அதைப்பற்றியே சிந்திப்பதாகக் கூறுகிறார் தாயார்.


வேட்டையாட சென்றவர்களுக்கோ பாலைப்பகுதி வரை தேடியும் எருமை மந்தையின் தடங்கள் காணக் கிடைக்கவில்லை. இம் மர்மத்தை விளக்க வகோண்டாவிடம் முறையிட தீர்மானிக்கிறார் தலைவர்.



அங்கிருந்து வெகு தொலைவில்  வேட்டைக்குழுவை தேடி வரும் யகரி,  எருமை விதை,  வானவில் குழுவினர் ஒரு குன்றின் மீது ஏறி நோட்டமிடத் தீர்மானிக்கின்றனர். குன்றை முதலில் அடையும் போட்டியில் எருமை விதையின் குதிரை வெற்றி பெறுகிறது.  சின்ன இடியிடம் 'நீ இன்னும் வேகமாக சென்றிருக்க முடியும்' என யகரி கூறும்போது ' வானவில்லுக்காக விட்டுக் கொடுத்ததாக சின்ன இடி கூறுகிறது.


அங்கிருந்து வேட்டையர்களின் இருப்பிடம் தெரியவில்லை,  ஆனால் முந்தைய இரவில் தான் கனவில் கண்ட எருமைக்கொம்புகளை ஒத்த பாறைகளைக் காண்கிறான் யகரி. அவ்வழியே எருமை மந்தையை தேடிச்செல்ல தீர்மானிக்கிறான். அவனைப்போகவிட்டு எருமை விதையும் வானவில்லும் முகாம் திரும்புகின்றனர்.


கொம்புகள் போன்ற பாறைகளை தாண்டி பாலைவனம் விரிந்துள்ளது. எருமைகளைக் கொண்டு வர பாலைவனத்தை கடக்க தீர்மானிக்கிறான் யகரி. 'பாலைவனத்தில் எருமைகளா?'  என்ற கேள்விக்கு கனவில் அவற்றை அங்குதான் கண்டேன் என்கிறான். வழியில் ஓநாய் ஒன்றும் பாலைவனத்தின் பயங்கரத்தைப் பற்றி எச்சரிக்கிறது.  எனினும் மன உறுதியுடன் முன்னேறுகிறான் யகரி.



பாலைவனத்தின் வெப்பம் தகிக்கத் தொடங்குகிறது. இருவரும் தாகத்தால் சோர்ந்து நம்பிக்கை இழக்கும் வேளையில் பெரும் கழுகார் வந்து மன உறுதியை விட்டுக்கொடுக்க இது தருணமில்லை என தேற்றுகிறார். முன்னர் வாக்களித்தபடி மணல்வெளியின் மத்தியில் சந்திப்பதை உறுதிப்படுத்திய பெரும் கழுகார் அங்கிருந்த சப்பாத்திக்கள்ளியின் நீரை பருக சொல்கிறார். இருவரும் தாகம் தீர்த்தபின் யகரியின் சிரமங்கள் இன்னும் தீரவில்லை என்றும் மறுநாள் அவன் எருமை  மந்தையைக் காண்பான் என்றும் பாறைச்சுவர் மட்டுமே அவன் தவிர்க்க வேண்டியதென்றும் புதிராக கூறிச்செல்கிறார்.



மறுநாள் பயணத்தை தொடரும் யகரியும் சின்ன இடியும் வேலி போல் அமைந்த பெரும்  பாறைப்பகுதி ஒன்றை வந்தடைகின்றனர். கடந்து செல்ல வழி இல்லாத அந்தப் பாறைச்சுவர் ஏறிக் கடக்கவும் முடியாத அளவு உயரமாக உள்ளது. என்ன செய்வதென யோசிக்கும்போது,  சின்ன இடி 'எந்த வேலியிலும் ஒரு திறப்பு இருக்கும்.' என்கிறது. அப்போது பெரும் கழுகார் கூறியதன் அர்த்தத்தை உணரும் யகரி அந்தப் பாறைச்சுவரின் திறப்பை தேடி சுற்றி வருகிறான். ஓரிடத்தில் நீர்வீழ்ச்சியை காணும் இருவரும் நீர் அருந்தி களைப்பாறுகின்றனர். நீர்வீழ்ச்சியை சிந்தனையுடன் நோக்கும் யகரிக்கு தன் கனவில் வெள்ளை எருமை ஒன்று நீரில் நனைந்தவாறு காட்சியளித்தது நினைவுக்கு வருகிறது. அதன் மூலம் நீர்வீழ்ச்சியின் பின்னே பாதை இருப்பதை கண்டு பிடித்து பாறைச்சுவரின் உட்பகுதிக்குள் சின்ன இடியுடன் நுழைகிறான். அங்கே புல்வெளியையும் கொழுத்த எருமைக்கூட்டத்தையும் காண்கிறான். அவனது குலதெய்வம் அவன் எருமைகளை கண்டடைவதில் வெற்றி பெற்று விட்டதை அறிவிக்கிறது.




அப்போது எருமை ஒன்று யகரியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்க வருகிறது. ஆனால் வெள்ளை எருமை ஒன்றால் யகரி காப்பாற்றப்படுகிறான். 'அஞ்சாதே!  இங்கே பயப்பட ஏதுமில்லை' என யகரியை தேற்றும் வெள்ளை எருமையிடம் தன் மக்கள் பசியில் வாடுவதை தெரிவிக்கிறான் யகரி.


தங்களின் உணவுப்பற்றாக்குறை காலத்தில் புகலிடம் தரும் அந்த வளமான மறைவிடம் பற்றி வேறு எவரும் அறியக்கூடாது என கூறும் வெள்ளை எருமை, மக்களுக்கு தாங்கள் அவசியம் தேவை என்றும்,  நல்ல வேட்டையர்கள் தங்கள் தேவைக்கும் அதிகமாக கொல்ல மாட்டார்கள் என்றும் கூறுகிறது. பின்னர் தன் கூட்டத்தினரிடம்  வசந்தகாலம் துவங்கி விட்டதை யகரி நினைவூட்டியதையும் இயற்கையின் விதிகளை நீண்ட நாட்கள் புறக்கணிக்க முடியாது என்றும் கூறி அன்றே மந்தைக்கூட்டத்தை  பயணத்தை துவங்க உத்தரவிடுகிறது.

யகரி தன் கனவில் கண்டதுபோல் எருமை மந்தை அவனைப் பின் தொடர்ந்து செல்கிறது.


யகரியும் வெள்ளை எருமையாரும் பிரியாவிடை பெரும் தருணம் உணர்ச்சிகள் நிறைந்தது. 

யகரி, நம் பாதைகள் இங்கே பிரிகின்றன.  உன் பழங்குடியினரிடம் திரும்பு.  எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் எங்கள் விதிக்குக் கீழ்ப்படிகிறோம்!


வருகிறேன் வெள்ளை எருமையாரே! 


வாழ்த்துகள்! தைரியமான  குட்டி சியோக்ஸ்!

( அமெரிக்கா ஆக்ரமிப்புக்குள்ளான போது வெள்ளை எருமையாரின் நம்பிக்கை பொய்த்துப் போனதுதான் வரலாறு. ஆக்ரமிப்பாளர்களின் நவீன ஆயுதங்கள் எருமை இனத்தை அழிவின் விளிம்பு வரை அருகச்செய்து அழித்தொழித்தன.)

வகோண்டாவின் பதிலுக்காக காத்திருந்த சியோக்ஸ் தலைவர் எருமை மந்தை வருவதைக் காண்கிறார். அந்தப் பரந்த புல்வெளியில் இயற்கையின் உணவுச்சங்கிலி இணைப்பு பெறுகிறது.



 முகாமுக்கு திரும்பும் யகரி விரைவில் மக்களின் பசி தீரும் என்று அறிவிக்கிறான்.


முற்றும்.

*******



அமெரிக்கக் காட்டெருது அல்லது அமெரிக்க பைசன் (American bison) எனப்படுவது 19ம் நூற்றாண்டுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தில் பெருந்தொகையில் காணப்பட்ட காட்டெருது இன விலங்கு ஆகும். அமெரிக்க முதற்குடி குழுக்கள் பலவற்றின் உணவு, பொருளாதார, ஆன்மீக மூலதாரமாக அமைந்த இந்த விலங்குகள் ஐரோப்பியரின் வருகையின் பின்பு அவர்களால் பெருந்தொகையில் வணிகத்துக்காக வேட்டையாடப்பட்டு இன அழிவின் நிலைக்குத் தள்ளப்பட்டன. அண்மைக் காலத்தில் இவை சில தேசியப் பூங்காக்களில் மீள் அறிமுகப்படுத்தப்பட்டு மீண்டு வருகின்றன. இன்று ஐக்கிய அமெரிக்காவில் வாழும் மிகப் பெரிய விலங்கு இதுவே ஆகும்.

அமெரிக்கக் காட்டெருதுகள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் பிரெய்ரிப் புல்வெளி, மற்றும் சமவெளிப் பகுதிகளிலும் வாழ்கின்றன. மேலும் செங்குத்தாக அமையாத மலைப்பாங்கான பகுதிகளிலும் வாழ்கின்றன.



How! - வோ!
Squaw - 
அமெரிக்க செவ்விந்தியப் பெண், அமெரிக்க செவ்விந்திய வழக்கில் மனைவி .

Tipi- கூடாரம்

Coyote- சிறு வட அமெரிக்க ஓநாய் வகை





*****



Monday, January 17, 2022

குல தெய்வத்தின் குரல்


 



யகரி  தைரியமும் தாராள குணமும் கொண்ட இளம் செவ்விந்திய வீரன்.

 'சின்ன இடி' அவனுடைய விசுவாசமான குதிரை,  அவனுடைய சியோக்ஸ் பழங்குடி இனத்தினர் பருவங்களுக்கு ஏற்ப இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். 


 யகரி அனைத்து விலங்குகளுடனும் பேசும் அற்புதமான திறன் உடையவனாக இருக்கிறான்.


யகரியின் சாகஸங்கள் அவன் சார்ந்துள்ள பழங்குடியின் வாழ்க்கை முறை மற்றும் சூழலைப் பற்றி அறிய தருவதுடன். சகிப்புத்தன்மை, நீதி, ஒற்றுமை, இரக்கம், மற்றும் நகைச்சுவையுடன் வாழ்க்கையைப் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது.


******



யகரியும் பெரும் கழுகாரும்




 அன்றும் வழக்கம்போல் பெரும் கழுகாரை கனவில் சந்திக்கிறான் யகரி. தான் அவனது கனவில் வருவது அதுவே கடைசி முறை என்கிறார் பெரும் கழுகார். தான் அவரை மீண்டும் காண முடியாதா? என அதிர்ச்சியுடன் கேட்கும் யகரிக்கு,  'பெரும் கழுகாரான தன்னைப்போல யகரி நடந்து கொள்ளும்போது மீண்டும் சந்திக்கலாம்' என்று கூறி விடை பெறுகிறார்.



மறுநாள் முதல் பெரும் கழுகாரைப்போல தானும் மாற முயற்சிகள் மேற்கொள்கிறான் யகரி. அவனுடைய முயற்சிகள் வாத்து ஒன்றை 'இந்த அளவு தப்பிச்சதே பெரிய விஷயம்,  இதைவிடக் கம்மியான ஒன்னுக்கே மண்டைத்தொலி போயிருக்கும்' என மிரள வைக்கிறது.

பெரும் கழுகாரைப் போல ஆவது எப்படி எனும் அவனது கேள்விக்கு பதில் அளிப்பார் யாருமில்லை.

அப்போது அவனது தோழி வானவில் ஒரு சிறுத்தைக்குட்டியை கொண்டு வருகிறாள். யகரி அதை தொட முயலும்போது அது மிரண்டு போய் காட்டுக்குள் ஓடுகிறது. அந்தக் குட்டியைத் தேடிச் செல்லும் இருவரும் காட்டில் பெரிய சிறுத்தை ஒன்றை எதிர்கொள்கின்றனர்.



யகரி துணிச்சலாக  வானவில்லின் உதவியுடன் மரக்கிளை ஒன்றை விசையுடன் இழுத்து  விட்டு சிறுத்தையைத் தாக்கி இருவரும் தப்பிக்க வழி செய்கிறான்.

ஒருநாள் அவனது பழங்குடியினர் காட்டுக்குதிரைகளைப் பிடிக்கும்போது 'சின்ன இடி' எனும் குதிரை தப்பிச்செல்வதைக் காண்கிறான்.



அவனது தந்தையின் ஆலோசனைப்படி கழுகுகள் அடிக்கடி காணப்படும் குன்றுப்பகுதிக்குச் செல்லும் யகரி,  அங்கே சின்ன இடி என அழைக்கப்படும்  காட்டுக்குதிரை பாறைகளில் கால் சிக்கித் தவிப்பதைக் காண்கிறான். கருணையுடன் அதை விடுவித்து அனுப்புகிறான்.


அப்போது பெரும் கழுகார் அவனை நேரில் சந்திக்கிறார். அவன் சிறுத்தைக்கு எதிராக தைரியத்துடனும், காட்டுக்குதிரையின் துன்பத்தைக் கண்டு கருணையுடனும் நடந்து கொண்டதால்,  அவன் தன்னைப்போன்று நடந்து கொள்வதில் வெற்றி பெற்றதாகக் கூறுகிறார்.



மேலும் தான் அவனது குல தெய்வமாகவும் பாதுகாவலராகவும் இருப்பதாகவும், அவனுக்கு மேலும் சாதனைகள் காத்திருப்பதாகவும் கூறி, அவரது அழகான இறகு ஒன்றை யகரிக்கு பரிசாக அளிக்கிறார். 


ஒருவழியாக பெரும் கழுகாரைப்போல தான் ஆகி விட்டதாக மகிழும் யகரி அந்த இறகை தலையில் சூடிக்கொண்டு தன் பழங்குடியினரிடம்  விரைந்து சென்று  பெரும் கழுகார் தன்னை நேரில் சந்தித்து இறகு அளித்ததைக் கூறுகிறான்.

ஆனால் அவனது மக்கள் யகரியின் கற்பனைகள் மடக்குதிரையின் வேகத்தில் பாய்ந்தோடுவதாகக் கூறி அவனது சொற்களை நம்ப மறுக்கின்றனர்.

அவனது தந்தையோ, அவனது இனத்தில் சாதனை செய்தவர்களே கழுகாரின் இறகை அணியலாம் என்றும்,  யகரி இன்னும் சாதனை ஒன்றும் நிகழ்த்தவில்லை என்றும் கூறி இறகை அவனிடமிருந்து வாங்கிக் கொள்கிறார். 




மறுநாள் யகரியின் நினைவாற்றலைத் தூண்ட நீராவிக் குடிலும் குளிர் நீர் வைத்தியமும் பார்க்கப்படுகிறது. ஆனாலும் பெரும் கழுகார்தான் தனக்கு இறகு அளித்தார் என்பதில் யகரி உறுதியாக இருக்கிறான்.

தொடரும் நாட்களில் யகரி தன் இரகசியத்துடன் தனித்திருந்தான்.

'பெரும் கழுகாரைப்போல ஆகி விட்டதாக பெருமையுடன் இருந்தேன். யாரும் என்னை நம்பவில்லை' என சிந்தனையுடன் உலவிக்கொண்டிருந்த யகரியை திடீரென காட்டுத்தீ சூழ்ந்து கொள்கிறது.

காட்டுத்தீயிலிருந்து தப்ப ஓடும் யகரியை பெரும் கழுகார் சந்தித்து தன்னைப் பின்தொடரச் சொல்கிறார். நெருப்பும் புகையும்  சூழ்ந்திருக்க நெடுந்தூரம் ஓடும் யகரி களைப்புறும் வேளையில் பெரும் கழுகார் 'இது அவனுக்குப் புதிய ஒன்றின் ஆரம்பம் என்றும், அவனுடைய குல தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பின்தொடரும்படியும்' கூறுகிறார்.

ஒரு பாதுகாப்பான இடத்தை சென்றடையும் இருவரும் இரவை அங்கே கழிக்க முடிவு செய்கின்றனர்.



'தன் மக்கள் தன்னை ஏன் நம்பவில்லை'  எனும் யகரியின் கேள்விக்கு, அவன் இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது, என்றும் ஒருநாள் அவனது இறகு அவனுக்குத் திரும்பக் கிடைக்கும் என்றும் பெரும் கழுகார் பதிலளிக்கிறார்.

விடிந்த போது பெரும் கழுகார் அங்கில்லை. யகரி வீடு திரும்பும் பயணத்தை மேற்கொள்கிறான்.



இரவில் ஓநாயின் ஊளைச்சத்தம் கேட்டு பாதுகாப்பான இடம் தேடி ஓடும்போது கரடிக்கான பொறிக்குழி ஒன்றில் விழுகிறான். குழிக்குள் இறங்கத் துணியாத ஓநாய் அவனிடமிருந்து விலகிச் செல்கிறது. அந்த ஆழமான பொறிக்குழியையே அன்றிரவைக் கழிக்கும் பாதுகாப்பான இடமாகக் கொள்கிறான் யகரி.


காலையில் பயணத்தை தொடரும் யகரி தொலைவில் தூசுப்படலத்தைக் கண்டு அங்கே செல்கிறான்.

அங்கு காட்டுக் குதிரைகளின் கூட்டத்தைக் காண்கிறான். அவற்றினூடே அவன் முன்னர் காப்பாற்றிய 'சின்ன இடி' எனும் குதிரையும் இருக்கிறது. 

யகரி அதன் மீது ஏற முயலும்போது  அவனை உதறித் தள்ளும் சின்ன இடி, பின்னர் யகரியின் நட்பான அழைப்பை ஏற்றுக் கொள்கிறது.

அந்நேரத்தில் தனக்கு பிராணிகள் பேசுவதைப் புரிந்து கொள்ளும் திறன் இருப்பதை உணர்ந்து கொள்கிறான் யகரி.

சின்ன இடி மற்ற குதிரைகளுக்கு தன் புதிய நண்பனான யகரியை அறிமுகம் செய்கிறது. அக்குதிரைகளில் ஒன்று, யகரி  சின்ன இடியின் மீது அமர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி, 'தான் சுதந்திரமாக இருப்பதையே விரும்புவேன்' என்கிறது. 'அக்குதிரைக்கு நட்பு என்பதன் அர்த்தம் இன்னும் புரியவில்லை' என்கிறது  சின்ன இடி.

அப்போது தொலைவில்  மக்கள் கூட்டம் செல்வதைக் காணும் யகரியும் சின்ன இடியும் அங்கே விரைந்து செல்கின்றனர். அருகில் சென்ற பின் அது தன்னுடைய பழங்குடி இனம்தான் என்பதைக் கண்டு கொள்கிறான் யகரி.

எவரும் பிடிக்க முடியாத சின்ன இடியை யகரி வசப்படுத்தியதால் அவன் சாதனை நிகழ்த்தி இருப்பதாகக் கூறி பெரும் கழுகார் யகரிக்கு பரிசாகக் கொடுத்த இறகை திருப்பி அளிக்கிறார் அவனுடைய தந்தை.

அந்த இறகை பெருமையுடன் தலையில் சூடிக் கொள்ளும் யகரி,  அனைத்தும் பெரும் கழுகார் கூறியபபடியே நடந்ததாக மகிழ்வடைகிறான்.

அவனுடைய இனத்தின் பயணம் தொடர்கிறது,  தன் பாதுகாவலரும் தன்னை தொடர்வதை  காண்கிறான் யகரி.

முற்றும்! 








கழுகு (eagle) என்பது அக்சிபிட்ரிடே (accipitridae) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும்.

யூரேசியா, ஆப்பிரிக்காவில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன.[1] இவற்றுள் இரண்டு வகைகள் (வெண்தலைக் கழுகு, பொன்னாங் கழுகு) ஐக்கிய அமெரிக்கா, கனடா நாடுகளிலும், ஒன்பது வகைகள் நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவற்றிலும், மூன்று வகைகள் ஆத்திரேலியாவிலும் காணப்படுகின்றன.


********