Friday, December 9, 2022

6,நரகத்தின் பேரழகி!

 

 லண்டன் 1945

தன்னை மோசடி செய்த மாலா எனும் இளநங்கையை கொலை செய்ய ஆயிரம் பவுண்டுகளுக்கு  லாரண்ஸ் வரேடோவுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறான் ஒரு மனிதன். கொலை செய்வதற்காக ஒரு துப்பாக்கியையும் தருகிறான்.

ஆனால் கொலை நிகழ்ந்த பின் புதிரான முறையில் நடந்து கொள்ளும் அந்த மர்ம மனிதன்  லாரண்ஸ் போலீசில் சிக்கவும் காரணமாகி விடுகிறான். லாரண்ஸுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது.

தூக்குதண்டனை நிறைவேற்றப்படும்போது கழுத்து முறியாததால் லாரண்ஸ் உயிர் பிழைத்து தப்பி விடுகிறான். ஆனால் அரசுக் குறிப்புகளில் அவன் இறந்து போனவனாக பதியப்படுகிறது.

 அவனது பாக்கெட்டில் ஆயிரம் பவுண்டுகள் உள்ளது, அது தன்னிடம் வந்த விதம் பற்றி தெளிவற்றவனாக அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் லாரண்ஸ் நாற்பதாண்டுகள் கழித்து தன் வயதான காலத்தில் மீண்டும் இங்கிலாந்து திரும்புகிறான்.

  தன்னுடன் கொலை ஒப்பந்தம் செய்து கொண்ட அந்த மர்ம மனிதனை மீண்டும் சந்திக்க விரும்பும் லாரண்ஸ் அமானுஷ்ய ஆராச்சியாளர் டைலன்டாக்கின் உதவியை நாடுகிறான்.

அந்த விசித்திர வழக்கை ஏற்றுக்கொள்ளும் டைலன்டாக் தனது துப்பறிதலை துவங்கினார். 


போலீஸ் தலைமையத்துக்குச் சென்று அந்த பழைய வழக்கில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் உரிமையாளர் பற்றிய விபரங்களை நவீன கம்யூட்டரின் உதவியுடன் அறிய முற்படுகிறார். ஆனால் இன்ஸ்பெக்டர் ப்ளாச் அந்த பழைய வழக்கில் தன் நேரத்தை செலவழிக்க மறுத்து விடவே காவல்துறையின் அனுமதியின்றி ஆவணக்காப்பகத்தில் நுழையும் டைலன் அந்த வழக்கு பற்றிய ஃபைலை படிக்க முயலும்போது புத்தகத்திலிருந்து பிசாசாக தோன்றும் உருவம் அந்த மர்ம மனிதனாக மாறி டைலனை சுட முயல்கிறது.

அப்போது அங்கு வரும் கிரவுச்சோ அந்த உருவத்தை நெற்றியில் சுட, 
 டைலன் அமானுஷ்ய உருவத்தால் அலைக்கழிக்கப்பட்டு 
மயக்கமடைகிறார்

இருபத்து நான்கு மணி நேரம் கழித்து கண் விழிக்கும் டைலன் தான் மருத்துவமனையில் இருப்பதையும், காவல்துறையின் ஆவணக் காப்பகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்ததால் கைது செய்யப்பட்டு இருப்பதையும்,
 இன்பெக்டர் ப்ளாச் ஐயாயிரம் பவுண்டுகள் செலுத்தி நிபந்தனை ஜாமீனில் தன்னை மீட்டிருப்தையும் அறிந்து கொள்கிறார்.

ஒரு நல்ல வழக்கறினரின் உதவியை நாடும்படி டைலனுக்கு ஆலோசனை கூறும் ப்ளாச், டைலன் கேட்டிருந்த துப்பாக்கியின் உரிமையாளர் பற்றிய விபரங்களை தந்து விட்டுச் செல்கிறார்.

 துப்பாக்கி 6/6/1941ல் மிஸ்டர் கிளாரன்ஸ் ஒட்பாடி என்பவருக்கு 
விற்கப்பட்டிருந்தது.




ஒட்பாடியை சந்திக்க செல்லும் டைலன்,  ஒட்பாடி புற்றுநோயால் இறந்து விட்டதையும் மனநலம் பாதிக்கப்பட்ட
அவனது தாய்  ஒட்பாடியின் உருவம் போன்ற பொம்மையை பராமரித்து வருவதையும் காண்கிறார்.

வீடு திரும்பிய டைலன் இசையை அனுபவித்தவாறு அந்த வழக்கைப் பற்றி சிந்திக்கிறார். விசாரணை ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக தோன்றினாலும்  அந்த வழக்கில் ஏதோ அமானுஷ்யத்தை உணர்கிறார்.

ஆனால் பூட்டப்பட்ட அறைகளுக்குள் திடும் தோற்றம் தரும் புதிர் மனிதனான லாரண்ஸ் வரேடோ சொல்லும் புதிய விஷயங்கள் வழக்கின் போக்கை மாற்றுகிறது.

தான் மாலாவை கொலை செய்யவில்லை என்றும்,  அவளது அழகில் மயங்கி,  அவள் சுடப்பட்டு விட்டதான புகைப்படம் ஒன்றை போலியாக உருவாக்கியதாகவும் கூறும் லாரண்ஸ் மாலாவை தேடிக் கண்டு பிடிக்கும்படி டைலனை கேட்டுக் கொள்கிறான்.

மாலாவைப் பற்றி விபரம் தேடி  மீண்டும் கிளாரன்ஸ் ஒட்பாடியின் வீட்டுக்குள் 'சந்தடியின்றி' நுழையும் டைலன், மாலா ஒட்பாடிக்கு எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் அவளுடைய முகவரியை தெரிந்து கொள்கிறார்.

அப்போது ஒட்பாடியின் தாய் டைலனை தாக்க முற்பட,  ஒட்பாடியின் பொம்மை உருவத்திலிருந்து வெளிப்படும் குரல் அவளை தடுத்து  டைலன் மாலாவைதேடி வந்திருப்பதாகவும் அவள்தான் தன்னை சிறிதளவாவது நேசித்த ஒரே பெண் என்றும் கூறி டைலனை காப்பாற்றுகிறது.





அங்கிருந்து வெளியேறி மாலாவின் முகவரிக்குச் செல்லும் டைலன் மாலாவை சந்திக்கிறார்.அவளது முழுப்பெயர் Mala behemoth (பிசாசின் பெயர்களில் ஒன்று) என தெரிந்து கொள்கிறார்.

மாலா, தான் 1782ல் நரகத்திலிருந்து  வரவழைக்கப்பட்ட ஒரு பிசாசு என்றும் பூமியில் ஒரு நிமிடமே இருந்ததாகவும் ஆனால் நரகத்தின் கால அளவின்படி நரகத்தின் ஒரு நிமிடம் என்பது பூமியின் இருநூறு ஆண்டுகளுக்கு சமம் என்றும் கூறுகிறாள்.

மேலும் பூமியில் இருந்த இருநூறு ஆண்டுகளில் போரடிக்காமல் இருக்க கிளாரன்ஸ் மற்றும் லாரண்ஸ் இருவரின் மரணத்துக்குப் பிறகும் அவர்களுடைய உடல்களை பாதுகாத்ததாக சொல்கிறாள்.

நரகத்துக்குத் திரும்பப் போவதாக கூறும் மாலா டைலன்அங்கிருந்து  வெளியேறும்போது ஆயிரம் பவுண்டுகள் அவனது பாக்கெட்டில் இருக்கும் என்கிறாள். 

லாரண்ஸ் அவளுடன் நரகத்துக்குச் செல்ல விரும்புகிறான். அவனுடன் மாலா பெகிமோத் பூமியிலிருந்து மறைந்து போகிறாள்.  டைலனின் கோட் பாக்கெட்டில் ஆயிரம் பவுண்டுகள் காணப்படுகிறது. அவற்றை தெருவில் பறக்க விட்டுச் செல்கிறார் டைலன்டாக்.




உங்களுக்குத் தெரியும், மூடிய கதவுகளுக்குள் செல்ல எப்பொழுதும் ஒரு வழி இருக்கிறது...  நல்லவனாக இருங்கள் டைலன்.  நீங்கள் நரகத்துக்கு வந்தால் என்னையும் மாலாவையும் சந்தியுங்கள்.

****




இங்கே கிளிக்:



(கதையின் இறுதிப்பகுதி இணை பிரபஞ்சம், அவற்றிடையே கால வித்தியாசம், சொர்க்கம்,  நரகம் என புரிந்து கொள்ள கடினமாக அமைந்துள்ளது. எனது புரிதலில் ஏதும் தவறும் இருக்க வாய்ப்புள்ளது.)


No comments:

Post a Comment